அவர் இல்லையென்றால் நான் இல்லை! இந்திய கிரிக்கெட் உலகின் அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் அபிஷேக் சர்மா, தனது அதிரடி ஆட்டத்தின் பின்னால் இருக்கும் ரகசியத்தை முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங்கிடம் பெற்ற பயிற்சியே தனது வாழ்க்கையையும், கிரிக்கெட் ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றியதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சிறுவயது முதல் தனது ஆதர்ச நாயகனாக யுவராஜ் சிங்கைக் கருதி வந்த அபிஷேக் சர்மாவிற்கு, கொரோனா ஊரடங்கு காலம் ஒரு மிகப்பெரிய வரமாக அமைந்தது. அந்த நேரத்தில் கிடைத்த தனிப்பட்ட பயிற்சியே அவரை ஒரு முழுமையான அதிரடி ஆட்டக்காரராக மாற்றியுள்ளது என்பது அவரது பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
யுவராஜ் சிங் கொடுத்த மந்திரக்கோல்: ஊரடங்கில் நடந்த மாற்றம்!
கொரோனா காலத்தில் நிலவிய அமைதியைப் பயன்படுத்தி, யுவராஜ் சிங்குடன் இணைந்து மிக நெருக்கமான பயிற்சியில் ஈடுபட்டதாக அபிஷேக் சர்மா குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் சில ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வந்த யுவராஜ் சிங், ஊரடங்கு நேரத்தில் அபிஷேக்கின் பேட்டிங் நுணுக்கங்களைச் செதுக்குவதில் அதிக நேரம் செலவிட்டார்.
இது குறித்து அபிஷேக் கூறுகையில், “யுவராஜ் சிங் கொடுத்த பயிற்சியால் தான் எனது கிரிக்கெட் ஆட்டம் மேம்பட்டது. சர்வதேச போட்டிகளில் நிலவும் அதீத அழுத்தத்தை எப்படிக் கையாள்வது என்பதையும், இக்கட்டான தருணங்களில் எப்படி மனவலிமையுடன் விளையாட வேண்டும் என்பதையும் அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார்” எனத் தெரிவித்தார்.
“இது ஐபிஎல்-க்கான பயிற்சி அல்ல!” – யுவியின் தீர்க்கதரிசனம்
பயிற்சியின் போது யுவராஜ் சிங் கூறிய ஒரு விஷயம் அபிஷேக்கின் தன்னம்பிக்கையை அப்படியே மாற்றியுள்ளது. “நாம் இப்போது எடுக்கும் பயிற்சி வெறும் ஐபிஎல் போட்டிகளுக்கோ அல்லது உள்ளூர் போட்டிகளுக்கோ கிடையாது. இது இந்திய அணிக்காக நீ ஆடும்போது வெற்றிகளை ஈட்டித் தருவதற்காக எடுக்கப்படும் பயிற்சி” என்று யுவி கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகளே அபிஷேக் சர்மாவை ஒரு பக்குவப்பட்ட வீரராக மாற்றியது. வெறும் பேட்டிங் மட்டுமின்றி, மிக முக்கியமான தருணங்களில் பந்துவீச்சின் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை எப்படி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதையும் யுவராஜ் சிங் அவருக்கு மனரீதியாகப் புகட்டியுள்ளார்.

அவர் இல்லையென்றால் நான் இல்லை: அபிஷேக்கின் பின்னணி!
அபிஷேக் சர்மாவின் கிரிக்கெட் ஆர்வம் அவரது குடும்பத்திலிருந்தே தொடங்கியுள்ளது. இவரது தந்தை ராஜ்குமார் சர்மா பஞ்சாப் அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடிய ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். சிறுவயது முதலே தனது தந்தையின் பயிற்சியைப் பார்த்து வளர்ந்த அபிஷேக், அப்படியே கிரிக்கெட்டைக் கற்றுக்கொண்டார்.
யுவராஜ் சிங்கின் வழிகாட்டுதலும், தந்தையின் பயிற்சியும் இணைந்து இன்று அபிஷேக் சர்மாவை இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உயர்த்தியுள்ளது. கரோனா காலத்தில் யுவராஜ் சிங் வழங்கிய அந்தத் தனித்துவமான பயிற்சியைத் தனது வாழ்நாளில் மறக்க முடியாது என்று அபிஷேக் சர்மா நன்றியுடன் கூறினார்.
அடுத்தவனப் பேச உனக்கு என்ன தகுதி இருக்கு? – ஹேமங் பதானியை வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த்

