இளம் ஐபிஎல் வீரர்களை வறுத்தெடுத்த டேல் ஸ்டெய்ன்! ஐபிஎல் 2026 தொடரில் தற்போது ஒரு புதிய விதமான வினோத கொண்டாட்டம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மைதானத்தில் விக்கெட்டை வீழ்த்திய பின் அல்லது அதிரடியாக ரன்களைக் குவித்த பின், இளம் வீரர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதக் குறிப்பை (Paper Note) எடுத்து கேமரா முன் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆரம்பத்தில் ரசிகர்களால் சுவாரசியமாகப் பார்க்கப்பட்ட இந்தச் செயல், தற்போது எல்லை மீறிச் செல்வதாக சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருதத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் மின்னல் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், இந்த காகிதக் குறிப்பு கொண்டாட்டத்தைப் பார்த்துப் பெரும் கோபமடைந்து, இளம் வீரர்களைக் கடுமையாக வறுத்தெடுத்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங், சிஎஸ்கே அணிக்கு எதிராக விக்கெட் எடுத்த பின் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துக் காட்டிய உடனேயே ஸ்டெய்ன் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “இத்தோடு இந்த நாடகத்தை நிறுத்துங்கள்” என அவர் சமூக வலைதளங்கள் வாயிலாக வெடித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “மைதானத்தில் அந்தக் காகிதங்களை அப்புறப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இது ஒன்றும் இப்போது பெரிய டிரெண்டிங் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த கொண்டாட்டம் எப்போதுமே ரசிக்கும்படியாக இருந்ததில்லை” என மிகக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த வினோதமான கொண்டாட்டம் கடந்த 2025 ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவால் தொடங்கப்பட்டது. அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகச் சதம் அடித்தபோது “இது ஆரஞ்சு ஆர்மிக்காக” என எழுதப்பட்ட பேப்பரைக் காட்டினார். அதன் தொடர்ச்சியாக, இந்த 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரகு சர்மா உள்ளிட்ட பலர் இதைப் பின்பற்றினர்.

சிஎஸ்கே அணியின் உர்வில் படேல், லக்னோவுக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தபோது, “இது உங்களுக்காக அப்பா” என்ற வாசகம் அடங்கிய பேப்பரைக் காட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால், நேற்று லக்னோ வீரர் ஆகாஷ் சிங், சிஎஸ்கே அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, தனக்கு விக்கெட் எடுக்கத் தெரியும் என எழுதிய தாளைக் காட்டியது பலருக்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.
கிரிக்கெட் என்பது மைதானத்தில் காட்டும் அசல் திறமையைப் பொறுத்ததே தவிர, இதுபோன்ற முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொண்டாட்டங்களால் அல்ல என்பதே ஸ்டெய்னின் முக்கியக் கருத்தாக உள்ளது. விக்கெட்டுகளும் ரன்களும் மட்டுமே ஒரு வீரரை அடையாளப்படுத்தும், காகிதத்தில் எழுதும் வாசகங்கள் அல்ல என அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
டேல் ஸ்டெய்னின் இந்த அதிரடியான பதிவுக்குக் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், முன்னாள் வீரர்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருகிறது. கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் வகையிலான இத்தகைய கொண்டாட்டங்களை ஐபிஎல் நிர்வாகம் தலையிட்டுத் தடை செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

