கெயிலின் சாதனையை காலி செய்த 15 வயது சிறுவன்! 15 இன்னிங்ஸில் 50 சிக்ஸர்கள்! வைபவ் சூர்யவன்ஷி படைத்த அசுர உலக சாதனை!
உலக கிரிக்கெட்டில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயிலின் பல அதிரடி சாதனைகளை முறியடிப்பது என்பது பல ஜாம்பவான்களுக்கே எட்டாக்கனியாக உள்ளது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிறிஸ் கெயிலின் நீண்ட கால இமாலய சாதனை ஒன்றை மிகச் சாதாரணமான முறியடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு 14 வயதில் அறிமுகமானதிலிருந்தே அதிரடி காட்டி வரும் வைபவ், இப்போது சிக்ஸர் மழையில் நனைந்து ஐபிஎல் வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார்.
கெயிலின் சாதனையை காலி செய்த 15 வயது சிறுவன் வைபவ்!
ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி இப்போது தன்வசப்படுத்தியுள்ளார். அவர் தனது 15-வது இன்னிங்ஸிலேயே இந்த 50 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் 21 இன்னிங்ஸ்களில் 50 சிக்ஸர்களை அடித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை 6 இன்னிங்ஸ்கள் முன்னதாகவே முடித்து, வைபவ் புதிய வரலாறு படைத்துள்ளார். ஒரு 15 வயது சிறுவன், சர்வதேச ஜாம்பவான்களை விடவும் வேகமாகச் சிக்ஸர்களைப் பறக்கவிடுவது கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
ஒரே இன்னிங்ஸில் 12 சிக்ஸர்கள் – சன்ரைசர்ஸை சிதறடித்த ஆட்டம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 12 பிரம்மாண்ட சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தனது அறிமுகப் போட்டியிலேயே சந்தித்த முதல் பந்தைச் சிக்ஸருக்கு அனுப்பிய வைபவ், 14 வயதிலேயே குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து அதிவேக இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரஞ்சு கேப் ரேஸில் அதிரடி!
தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில், அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் (Orange Cap Race) வைபவ் சூர்யவன்ஷி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். 15 வயதிலேயே அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களுக்குப் போட்டியாக ரன்களைக் குவித்து வருவது, அவர் விரைவில் இந்திய தேசிய அணியில் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள வைபவ், அடுத்தடுத்த போட்டிகளிலும் இதே வேகத்தைத் தொடர்ந்தால், இந்த சீசனில் இன்னும் பல சாதனைகள் தகர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

